×

அதிமுக எம்பி தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலை ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக விரிவான சர்வே மேற்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக விரிவான சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் சென்னையை அடுத்த கோனம்பேடு கிராமத்தில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அரசு நிலங்களை ஆக்கிரமித்து, மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாக கூறி கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில், கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சர்வே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்குமாறு மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : AIADMK ,Thambidurai ,Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,AIADMK Rajya Sabha ,College of Arts, Science and Engineering… ,
× RELATED தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு