×

ரயில்வேக்கு தேவையான நிலத்தை அரசு அளிக்கவில்லையா? ஒன்றிய அமைச்சர் புகார் உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

 

திருச்சி: திருச்சியில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் ரயில்வே துறை மேம்பாடுக்கு தேவையான நிலத்தை தமிழ்நாடு அரசு அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதேவேளையில் தமிழ்நாடு முதல்வர், ரயில்வே துறை சார்ந்த வளர்ச்சித்திட்ட பணிகளை தமிழ்நாட்டில் முன்னுரிமை அளித்து மேற்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய ரயில்வேதுறை அமைச்சர், தமிழ்நாடு அரசு மீது வைத்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அதோடு அவரது துறை வெளியிட்ட செய்திகூட ஒன்றிய அமைச்சருக்கு தெரியாமல் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 7 ரயில்வே திட்டங்களுக்கு 148.65.30 ஹெக்டேர் பரப்பளவில் நிலங்கள் ரயில்வே திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு நில கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதில் 2 பெரிய திட்டங்களுக்கு தேவைப்படும் 128.41.91 ஹெக்டேர் நிலத்தில் 73.65.02 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துவிட்டது. திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இடையே அகல ரயில் பாதை பணிகளை முடிக்க தேவைப்படும் 299 கோடி ரூபாயை ஒன்றிய ரயில்வே துறை வழங்கவில்லை. கடந்த 5ஆண்டுகளில் 739 கோடி ரூபாய் மட்டுமே தமிழ்நாட்டில் ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியும் முழுமையாக கிடைக்க பெறவில்லை. இதனால் நில கையகப்படுத்தும் பணியில் சிரமம் உள்ளது. தமிழ்நாட்டில் ரயில்வே பணிகளுக்காக 2500.61 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் 931.52 ஹெக்டர் பரப்பளவு உள்ள நிலங்களுக்கு ரயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

தமிழ்நாட்டில் முக்கியமான 19 ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய மீதமுள்ள 1273.05.15 ஹெக்டர் பரப்பளவு உள்ள நிலங்களில் 1198.02.34 எக்டர் பரப்புள்ள நிலங்களுக்கான நில எடுப்பு பணிகள் முடிவுற்று, ரயில்வே நிர்வாகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது 94 சதவீத நில கையகப்படுத்தும் பணி ஆகும். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலங்களை எல்லாம் விட்டுவிட்டு முற்றிலுமாக ரயில்வே துறையை தமிழ்நாடு புறக்கணித்ததுபோல ரயில்வே துறை அமைச்சர் கூறி வருகிறார்.

அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது என்பதை தமிழ்நாடு முதல்வர் ஆதாரப்பூர்வமாக தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். தேர்தல் நெருங்கும்போது கூட தமிழ்நாட்டிற்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டை அவர்கள் பாராமுகமாக கையாளுகின்றனர். மெட்ரோ திட்டத்திற்கு கூட சரியாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Minister ,Minister ,Sivashankar ,Trichy ,Tamil Nadu Transport and Electricity ,Union Railway ,Ashwini Vaishnav ,Tamil Nadu government ,
× RELATED தமிழ்நாட்டில் நடந்து வந்த எஸ்ஐஆர்...