திருப்பூர்: திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் பல்லடத்தில் நேற்று நடந்தது. பின்னர் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் என 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நேரடியாக துணிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் துணி விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், வர்த்தக நம்பகத்தன்மை சந்தேகமடைந்து வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால், விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று (11ம் தேதி) முதல் 50 சதவீத உற்பத்தி குறைப்பு செய்வார்கள். தொழிலாளர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதால் தான் பகுதி நேரம் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படும் நிலையில் இது பாதியாக குறைக்கப்படும். நல்ல பஞ்சு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் அதன் கழிவு பஞ்சு 130 ரூபாய் வரை விற்கப்படுவது ஏற்புடையது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
