×

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா: விலங்குகள் நலவாரியம் அறிவிப்பு

சென்னை: சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைத்து பராமரிக்க விண்ணப்பிக்கலாம் என்று விலங்குகள் நலவாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விலங்குகள் நலவாரியம் வெளியிட்ட அறிவிப்பு: பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு, மனிதாபிமானத்துடன் பிராணிகளை நடத்துதல் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைத்து பராமரித்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக முன்அனுபவம் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளில் இருந்து ஒன்றினை தேர்வு செய்து, அவற்றிற்கு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நிலம் ஒதுக்கீடு செய்து தரப்படும்.

அவ்விடத்தில் செல்லப்பிராணிகளுக்கு தேவையான விளையாட்டு சாதனங்கள், பச்சை புல்வெளிகள், உணவுப் பொருட்கள் சார்ந்த கடைகள், பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடுகளை அந்நிறுவனத்தின் சுயநிதியினைக் கொண்டு உருவாக்கி, அதனை பராமரித்திடவும், இதன்மூலம் கிடைக்கப்பெறும் வருவாயினை அரசுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை www.tnawb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 26ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai, Coimbatore ,Animal Welfare Board ,Chennai ,Coimbatore ,Tamil Nadu Animal Welfare Board ,Chennai… ,
× RELATED தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவு