நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஒட்டி கலை நிகழ்ச்சிகளுகான ஒத்திகை 3 நாட்களாக நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.
காலை 11 மணியளவில் ஒத்திகையின் போது 3-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மாணவி முகத்தில் பூச்சி கடித்ததற்கான அறிகுறி தென்பட்டதை அடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவியின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்ததை அடுத்து நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகம் ரத்து செய்தது. மாணவி உயிரிழப்புக்கன காரணம் குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
