கம்யூனிச சித்தாந்தத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: அமித்ஷா பேச்சு

 

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான உயர் நிலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் மற்றும் ஒன்றிய அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், எக்ஸ் தளத்தில், அமித் ஷா வெளியிட்ட பதிவில், ஒன்றிய அரசின் நக்சல் ஒழிப்பு யுக்தி நன்றாகவே பலனளித்துள்ளது. பாதுகாப்பை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட அந்த யுக்தியின் படி நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன.

மேலும், நக்சல்களின் நிதியமைப்புகளை கண்டறிந்து தடுத்தல் மற்றும் சரண் கொள்கை ஆகியவை நல்ல விளைவுகளைத் தந்துள்ளன. ஏற்கனவே உறுதியளித்தபடி வரும் மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்படும்,” என்று பதிவிட்டார். பின்னர் ராய்ப்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமைச்சர் அமித்ஷா, ‘‘கம்யூனிஸ்டுகள் எங்கெல்லாம் ஆட்சியில் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களால் வளர்ச்சியை கொண்டு வர முடியவில்லை. கம்யூனிச சித்தாந்தம் அழிவுக்கான குறியீடு. ஜனநாயக அரசியலில் கம்யூனிச சித்தாந்தத்துக்கு இடமில்லை. எனவே கம்யூனிச சித்தாந்தத்துக்கு இந்தியா உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நக்சலைட்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து போலீசிடம் சரணடைய வேண்டும்’’ என்றார்.

 

Related Stories: