வேப்பூர்: தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியின் நான்காவது மாநில மாநாடு வேப்பூர் அடுத்த பாசாரில் நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
40 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டு திடலை சுற்றியும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களோடு ஐஜேக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து, தலைவர் ரவி பச்சமுத்து இருப்பது போன்ற புகைப்படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அதிலும் குறிப்பாக அண்ணாமலையுடன் ஐஜேக நிறுவனர் பச்சமுத்து, தலைவர் ரவி பச்சமுத்து இருப்பது போன்ற பேனர்கள் அதிக இடங்களில் இடம் பிடித்து இருந்தது. ஆனால் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பேசிய பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் படம் மாநாட்டு திடலில் இடம் பெறவில்லை, அதே போல மாநாட்டு மேடையிலும் நயினார் நாகேந்திரன் படம் இடம் பெறவில்லை. இதனால் அவரும் ஆதரவாளர்களும் அப்செட் ஆகினர்.
