திமுக-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது; தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவில் உள்ளவர்கள் தான் பேசுவார்கள்: கனிமொழி எம்பி பேட்டி

 

சென்னை: திமுக-காங்கிரஸ் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது என்றும், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவில் உள்ளவர்கள் தான் பேசுவார்கள் என்றும் கனிமொழி எம்பி கூறினார். திமுக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவர் கனிமொழி அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி பெற்று, அவர்கள் என்னென்ன கருத்துகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கருதுகிறோர்களோ அது தேர்தல் அறிக்கையாக விரைவில் வெளியிடப்படும்.

உங்கள் கருத்துகளையும் இதற்காக உருவாக்கி இருக்கக்கூடிய போர்டலில் தெரிவிக்கலாம். எழுத்து பூர்வமாக தெரிவித்தால் அதையும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் இணைத்து கொள்வோம். திமுக- காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவில் உள்ளவர்கள் தான் பேசுவார்கள். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக இன்னும் எதுவும் பேசப்படவில்லை. எனவே, அதை பற்றி நான் கருத்து சொல்ல முடியாது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உட்பட 8 எம்பிக்கள் நேற்று நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தில், எதிர்கட்சி தலைவர் பேசக்கூடிய ஒவ்வொரு நேரத்திலும் அவர் பேசுவது தடுக்கப்படுகிறது. இதனால் அவர் தனது பேச்சை பதிவு செய்ய முடியாத சூழல் இருந்தது. அதனால் தான் நாங்கள் அமளியில் ஈடுபட வேண்டிய ஒரு சூழல் உருவாகியது. புதிய கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்தால் முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: