வாஷிங்டன்: எப்ஸ்டீன் கோப்புகளில் ேமாடி, அனில் அம்பானி, ஒன்றிய அமைச்சர் பெயர்கள் அடிபடுவது ஏன் என்றும் இஸ்ரேல் பயணித்தின்போது மோடி செய்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போக பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காகவே அவர், தனி தீவு ஒன்றையே வைத்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் உலக பணக்காரர் பில் கேட்ஸ், ரஷ்ய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி அதற்கான மருந்துகளை ரகசியமாக எடுத்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. எலான் மஸ்க், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்று உள்ளன. அதேநேரம் எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
2017 ஜூன் 25, 26 தேதிகளில் அமெரிக்கா சென்ற மோடி, அங்கு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். பின்னர் அதே வருடம் ஜூலை 4 – 6 வரை பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். எப்ஸ்டீன் கோப்புகளில், ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சல் ஒன்றில், “இந்திய பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார், இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காக தேவையான எல்லாவற்றையும் செய்தார். அது நல்ல பலனளித்தது” என்று எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
