திருப்பூர், பிப்.2: திருப்பூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், நான்காவது குடிநீர் திட்டம், பாதாளச் சாக்கடை திட்டம் என பல்வேறு பணிகளை நடந்து வருவதால் ஆங்காங்கே சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால் பணிகள் முடித்த பகுதியில் சாலைகள் சீரமைக்கப்படவில்லை. நகரில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் பழுதடைந்தும், குண்டும், குழியுமாகயும் காட்சியளிக்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகர சாலைகள், வீதிகள் உள்பட அனைத்து சாலைகளையும் முழுமையாகச் சீரமைக்க வலியுறுத்தி நேற்று குமரன் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., தெற்கு மாநகரச் செயலாளர் ஜெயபால் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.