பெரணமல்லூர், பிப்.2: பெரணமல்லூர் அருகே கால்நடை சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். பெரணமல்லூர் அடுத்த தவணி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் பொதுமக்களில் பலர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இதில் கால்நடைகளுக்கு ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டால், 9 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள மேலத்தாங்கல், கொழப்பலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அவ்வாறு கால்நடைகளை சிகிச்சைக்காக நெடுந்தூரம் அழைத்து செல்வதால் ஏற்படும் சிரமங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிப்படைகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், எங்கள் கிராமம் மற்ற பகுதிகளிலிருந்து உள்ளடங்கிய பகுதியாக உள்ளது. இதனால் இங்கு குறிப்பிடத்தக்க பஸ் வசதியும் கிடையாது. இங்கு வசிக்கும் பொதுமக்களில் பலர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகிறோம். இதற்காக கால்நடைகளை வளர்த்து வருகிறோம்.