திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் யோகான்(25). இவர் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி யேசுவா(23). இவர் கஞ்சா போதைக்கு அடிமையானவர். இந்நிலையில், நேற்று மாலை கஞ்சா போதையில் வீட்டுக்கு வந்த யேசுவாவை, யோகான் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த யேசுவா தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகானை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே யோகான் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.