சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி தனது பானியில் கவிதை மூலம் மத்திய பட்ஜெட்டை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்குத் தமிழ் கற்பித்த மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் கண்ணதாசன். அவர் இந்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதை யூகித்து அன்றே பாடிவைத்தார். ‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம்.
பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…
பாரதத்தின் பெருமை தன்னைப் பாடு, பாடு சோறு எதுக்கு தம்பி!’
நான் ஆசிரியர்களிடமிருந்து ஊக்கம் பெறுகிறவன். பல மாமாங்கங்களுக்கு முன்பு ஒரு பட்ஜெட்டைக் கண்டு நானும் தமிழில் கவிதை புலம்பியது இத்தருணத்தில் நினைவிலாடுகிறது.
‘கள்ளிச் செடி பசுவாகிப்
பால் சுரக்கும்
வேப்பம்பூத் தேனெடுக்கும்
பண வண்டு
வறுமைக் கதிர் அறுக்கக்
கானல் நீர் வாய்க்கால்கள்
கற்பனை அறுவடையில்
கனவு நெல் மணிகள்
தெருவோர ஜமீன்தார்கள்
வரி செலுத்த
பஞ்ச ராஜ்ஜியப் பரிபாலனம் எங்கும் ஓங்கும்’- இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பட்ஜெட் என்றில்லை; எந்த பட்ஜெட் என்றாலும் எங்களது வரிகள் பொருந்தும் போலிருக்கிறது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
