சென்னை: கடந்த பட்ஜெட்டில் அறிவித்த ரூபாய் எவ்வளவு, செய்த செலவு செய்தது என்ன என்பது பற்றி பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் விளக்கி உள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: மோடி சொன்னது போன்று மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இன்னும் விடாமல் உள்ளனர். எனவே அடுத்த 15 வருடத்திற்கு இந்த அதிவேக ரயில் வர வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த பட்ஜெட்டில் அதிவேக ரயில் அறிவித்ததை பெரிய சாதனையாக தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை.
சவரன் தங்கப் பத்திரத் திட்டம் (SGB) கீழ் தங்கம் வாங்கி எப்போது வேண்டும் என்றாலும் விற்றுக்கொள்ளலாம், அதற்கு வரி இல்லை என்று தெரிவித்தவர்கள் தற்போது அதற்கு வரி உள்ளது என தெரிவித்து வருகின்றனர். எனவே அவர்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்களால் பின்பற்ற முடியவில்லை. யார் எல்லாம் அந்த திட்டத்தின் கீழ் தங்கம் வாங்கி உள்ளனரோ அவர்களுக்கு பெரிய அடி. கடந்த பட்ஜெட்டில் சொன்னது ஒன்று செய்தது ஒன்று. கிராம வளர்ச்சிக்கு கடந்த பட்ஜெட்டில் அறிவித்ததில் 53,000 கோடி குறைவாக செலவு செய்து உள்ளனர்.
இதில் நகர்ப்புற வளர்ச்சிக்கு 39,000 கோடியும், விவசாயத்திற்கு 7,000 கோடியும் கடந்த ஆண்டு அறிவித்ததை விட குறைவாக செலவு செய்து உள்ளனர், கல்விக்கு 6,700 கோடியும், சுகாதாரத்திற்கு 3,700 கோடியும் குறைவாக செலவு செய்துள்ளனர். மேலும், ஜல் ஜீவன் திட்டத்திற்கு கடந்த ஆண்டு 67,000 பட்ஜெட்டில் அறிவித்து 17,000 கோடி மட்டுமே செலவு செய்துள்ளனர், அதேபோல, பட்டியலின மக்களுக்கு 2,140 கோடி அறிவித்து 1,250 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் அறிவித்ததில் இருந்து 30 முதல் 40 சதவீதம் குறைவாக செலவு செய்துள்ளனர். ஏன்னென்றால் வரவு இல்லாத காரணத்தினால் செலவு குறைவு. அதிக செலவு 15 லட்சம் கோடி வட்டி கட்டியுள்ளனர். அரை சதவீதம் தான் விலைவாசி அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர், ஆனால் ஆர்பிஐ 4 சதவீதம் என தெரிவித்துள்ளது. தங்கம், டாலர், மியூச்சுவல் பண்டுகள் எது எடுத்து பார்த்தாலும் நஷ்டம் தான். வேலைவாய்ப்பு அதிகமாக இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
