ஆரணி : களம்பூர் பேரூராட்சியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் கை கிருத்திகையையொட்டி 2ம் ஆண்டு கன்றுவிடும் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோயில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து பொதுமக்கள் வழிப்பட்டு, கன்று விடும் விழாவை தொடங்கி வைத்தனர்.
அப்போது, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350க்கும் மேற்பட்ட இளம் காளைகள் கொண்டு வரப்பட்டது.
மேலும், இளங்காளை ஓடும் பாதையில் மண் கொட்டப்பட்டு, இருபுறமும் கம்புகளால் தடுப்புகள், கம்பிகள், கட்டைகள் அமைத்து, கன்று விடும் விழாவில், அவிழ்த்துவிடப்பட்ட இளங் காளைகள் முக்கிய வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது.
அப்போது, களம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விழாவை காண ஏராளமான மக்கள், இளைஞர்கள் சிறுவர்கள், உற்சாகத்துடன் இளங்காளைகளை விரட்டிக் கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, இவ்விழாவில், குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடந்த இளங்காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.60 ஆயிரம், இரண்டவது பரிசு ரூ.50 ஆயிரம், 3வது பரிசு 40 ஆயிரம், 4 பரிசு ரூ.30 ஆயிரம், 5ம் பரிசு 25 ஆயிரம் என மொத்தம் ரொக்கபரிசுகள் என 101 பரிசு பொருட்கள், தங்க ரொக்க பணம் வழங்கப்பட்டது.
அப்போது, களம்பூர் ஆரம்ப சுகாதாரநிலைய குழுவினர் தலைமையிலான மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில் காயம் ஏற்பட்ட வர்களை களம்பூர் மற்றும் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விழாவில் 30 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
