சென்னை: ஜனநாயகன் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்க கோரி படத்தை தயாரித்த நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உடனடியாக தணிக்கை சான்று வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
மேலும் நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பில், “ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் மத மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஜனநாயகன் படத்துக்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. புகார்களை ஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம். ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு செய்யவும் ஜனநாயகன் திரைப்பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்கவும் உத்தரவிடுகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து ஆணையிடுகிறோம். புதிய கோரிக்கையுடன் தனி நீதிபதியிடம் ஜனநாயகன் படத் தயாரிப்பு நிறுவனம் மனுதாக்கல் செய்யலாம். மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும்,” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளதால் ஜனநாயகன் படத்துக்கு சிக்கல் நீடிக்கிறது.
