தூத்துக்குடியில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை : தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், மாப்பிள்ளையூரணி கிராமத்தைச் சேர்ந்த செல்வன். திருமணி (வயது 13) த/பெ.வனராஜன், செல்வன், நரேன் ஸ்ரீ கார்த்திக் (வயது 12) த/பெ.ஆறுமுகம் மற்றும் செல்வன்.முகேந்திரன் (வயது 12) த/பெ.கதிரேசன் ஆகிய மூன்று சிறுவர்கள் நேற்று (26.01.2026) மாலை சுமார் 04.15 மணியளவில் மாப்பிள்ளையூரணி கிராமத்தில் உள்ள சிலுவைப்பட்டி மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மூன்று சிறுவர்களின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்,” இவ்வாறு தெரிவித்தார். தூத்துக்குடி ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12), முறையே 8, 9, 7ம் வகுப்பு பயின்று வந்தனர். நண்பர்களான மூவரும் மேலும் 6 பேருடன் நேற்று மாலை கடலில் குளிப்பதற்காக தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைக்கு சென்றனர். கடலில் குளித்துக்கொண்டு இருந்தபோது திடீரென ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.சிறுவர்கள் 5 பேர் நீந்தியும், தத்தளித்தும் கரைக்கு வந்தனர். மீனவர் ஒருவர் சிறிய படகில் சென்று தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். மற்ற 3 பேரும் கடலில் மூழ்கினர்.

Related Stories: