சென்னை: தவறான சிகிச்சையால் உயிரிழந்த தனது நாயின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோரி, உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசு, கால்நடைத்துறை இயக்குனர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், மணவூரை சேர்ந்த சுமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் வளர்த்து வந்த 9 வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால், கடம்பத்தூர் கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்தேன். அவர் அளித்த மருந்தை சாப்பிட்ட நாய், கோமா நிலைக்கு சென்று விட்டது. பின்னர் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் மீது போலீசில் புகார் அளித்தேன். இதன்காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் எனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர்.