பேரவை வளாகத்தில் அமைச்சர் சேகர்பாபுவுடன் சந்திப்பு திமுக கூட்டணிக்கு ஓ.பி.எஸ் வர வாய்ப்பு?

சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதால் ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அந்த அமைப்பின் பெயரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக மாற்றினார். வருகிற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருவதற்கான முயற்சிகளை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். ஆனால் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சியில் சேர தொடங்கினார்கள். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கூட்டணி தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுக்க தாமதம் ஆனதால் அவரை விட்டு விலகி திமுகவில் இணைந்ததாக வைத்திலிங்கம் கருத்து தெரிவித்தார்.

இதேபோல் ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
நேற்று முன்தினம் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இல்லை. இதற்கிடையே தை மாதம் முடிவதற்குள் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

நேற்று ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். பேரவை கூட்டம் நேற்று பிற்பகல் நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். சட்டப்பேரவை வளாகத்தில் சுமார் 15 நிமிடங்கள் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் ஐக்கியம் ஆகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என்கிற நிலையில் அவர் திமுக ஆதரவு நிலைப்பாடு எடுக்கக்கூடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில்தான் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் சந்தித்து பேசி இருப்பது முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், நேற்று சட்டப்பேரவை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் பேசும்போது, திமுக கொண்டு வந்த சட்டமசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், தமிழக ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: