அரசியல் ஆதாயத்துக்கு ஒன்றிய அமைப்புகளை மோடியும் அமித் ஷாவும் தவறாக பயன்படுத்துகின்றனர்: புஜ்பால் விடுவிப்பு குறித்து சாகேத் கோகலே கருத்து

 

கொல்கத்தா: மகாராஷ்டிரா சதன் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சகன் புஜ்பாலை விடுவித்ததற்கு திரிணாமுல் காங். கண்டனம் தெரிவித்துள்ளது. 2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்’ கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது. இதில் அமைச்சர் சகன் புஜ்பாலுக்கு ரூ. 6.03 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை சகன் புஜ்பால், அவரது மகன் பங்கஜ் புஜ்பால், உறவினர் சமீர் புஜ்பால் உட்பட 46 பேர் மீது வழக்கு பதிவுசெய்தது.

இவ்வழக்கில் 2016ல் கைது செய்யப்பட்ட புஜ்பால் 2 ஆண்டு சிறைக்கு பின், அஜித் பவாருடன் இணைந்து பாஜக அரசில் அமைச்சரானார். ஊழல் வழக்கில் இருந்து துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி அமைச்சர் சகன் புஜ்பால் மற்றும் அவரது மகனை கோர்ட் விடுதலை செய்துள்ளது. மகாராஷ்டிரா சதன் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் சகன் புஜ்பாலை விடுவித்ததற்கு திரிணாமுல் காங். கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங். எம்.பி. சாகேத் கோகலே வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; பாஜக வாஷிங் மெஷினில் சென்றுவந்த பிறகு புஜ்பாலுக்கு எதிரான ED வழக்கு திடீரென தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொய் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு கட்சி மாற நிர்பந்திக்கப்பட்டாரா புஜ்பால்? பாஜகவுடன் இணைந்ததால் உண்மையான வழக்கில் இருந்து புஜ்பால் விடுவிக்கப்பட்டு உள்ளாரா? அமித் ஷாவின் ED மாஃபியா இப்படித்தான் செயல்படும். அரசியல் ஆதாயத்துக்கு ஒன்றிய அமைப்புகளை பிரதமர் மோடியும் அமித் ஷாவும் இப்படித்தான் தவறாக பயன்படுத்துகின்றனர். நீதிமன்றங்கள் இதைப் பார்க்கின்றனவா? அல்லது கண்களை மூடிக் கொள்கின்றனவா? என சாகேத் கோகலே கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: