பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

 

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளுக்காக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் என பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7 ஆயிரத்து 850 ரூபாய் வழங்க வேண்டும், பணிக்கொடையாக 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக தமிழக அரசுடன் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட சத்துணவு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். காலமுறை ஊதிய உயர்வு, பணிக்கொடை உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 71,000 பேர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Related Stories: