கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

*துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு

கடலூர் : கடலூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்:

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் நேற்று கடலூரில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 685 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த குறைதீர்வு முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தலா ரூ.14,490 வீதம் மொத்தம் ரூ.72,450 மதிப்பீட்டிலான கைப்பேசிகள் வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியர் தங்கமணி, துணை ஆட்சியர் (பயிற்சி) டியுக் பார்க்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: