தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையாக உழைக்க வேண்டும்

திருப்பூர், ஜன.21: திருப்பூர்- காங்கயம் ரோடு, டி.எஸ்.கே.பஸ் ஸ்டாப்பில், மாநகர் மாவட்ட அதிமுக அலுவலக திறப்பு விழா  நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும். துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் குணசேகரன், விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். அமைப்பு செயலாளர்கள் ஆனந்தன், சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது: திருப்பூருக்கு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு பணிகளையும் அதிமுக., ஆட்சியில் தான் செய்து தரப்பட்டுள்ளது. அதிமுக அரசு மக்களுக்கு செய்துள்ள நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வரும் தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும். நமக்குள் எந்த பிரச்னை இருந்தாலும், அதிமுக., வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற வைக்க அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார். முன்னதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, இன்னும் 3 மாதத்தில் தேர்தல் வந்து விடும். வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நல்ல ஆலோசனைகளை பெறும் இடமாக இந்த கட்சி அலுவலகம் இருக்கும் என்றார். விழாவில், கழக நிர்வாகிகள் அன்பகம் திருப்பதி, சடையப்பன், ஷாஜகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: