சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தார் திடீர் மயக்கம்: பணிச்சுமை காரணமா?

 

சோளிங்கர்: சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை தாசில்தார் மயக்கமடைந்தார். இதற்கு பணிச்சுமை காரணமா என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த குருராஜா பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிள்ளையார்(45). இவர் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் ஆக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் சோளிங்கர் தாலுகா அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். அலுவலகத்திற்குச் சென்ற சிறிது நேரத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் பிள்ளையார் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.

அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தேர்தல் துணை வட்டாட்சியர் பணிச்சுமை காரணமாக மயங்கி விழுந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: