குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் சாமி தரிசனம்..!!

வேலூர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் அருகே உள்ள ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை வேலூர் தங்க கோவிலுக்கு வருகை தந்துள்ளார். இதற்காக திருப்பதியில் இருந்து 3 ஹெலிகாப்டர்கள் மூலமாக நேரடியாக தங்க கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடிற்கு வருகை தந்த அவரை தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், கைத்தறி மற்றும் சிறுநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, எஸ்.பி மயில்வாகனம் மேலும் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆகியோர் குடியரசுத் தலைவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ஹெலிபேடில் இருந்து தங்க கோவில் வளாகத்திற்கு அருகே அமைந்துள்ள இடத்திற்கு குடியரசு தலைவர் பலத்த பாதுகாப்புடன் வருகை தந்தார். தங்க கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சுமார் 1700 கிலோ வெள்ளியால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை முதற்கட்டமாக குடியரசத்தலைவர் தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து 700 கிலோ தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாலட்சுமியை தரிசனம் செய்து வருகிறார். இதனை தொடர்ந்து பொற்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தியான மண்டபத்தையும் குடியரசு தலைவர் திறந்து வைத்தார். கோவிலுக்கு வருகை தந்துள்ள அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.

தொடர்ந்து சீனிவாச பெருமாள் கோவிலிலும் தரிசனம் செய்கிறார். பின்னர், வைபவ லட்சுமி கோவிலில் சிறப்பு பூஜை செய்கிறார். இறுதியாக கோவில் வளாகத்தில் மரம் நடும் நிகழ்விலும் கலந்து கொள்கிறார். இந்த மரம் நடும் நிகழ்வுக்கு பிறகு 12.30 மணியளவில் மீண்டும் கோவில் வளாகத்திலிருந்து சாலை மார்க்கமாக அருகே உள்ள ஹெலிபேடிற்கு செல்லும் அவர் அங்கிருந்து பலத்த பாதுகாப்போடு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக திருப்பதி செல்கிறார். குடியரசு தலைவர் வருகையை அடுத்து டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் 1700 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பலத்த பாதுகாப்பது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: