திருச்சி, டிச.29: சீர்மரபினருக்கு (டிஎன்டி) ஒரே சான்று வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி கலெக்டர் அலுவலகத்தை சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில நிர்வாகிகள் பரதன், பாலமுருகன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில செயலாளர் காசி மாயத்தேவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், தமிழகத்தில் உள்ள 68 சமூக சீர்மரபினர் மக்களுக்கு 1979 வரை பழங்குடி சீர் மரப்பினர்(டிஎன்டி) என்றே சாதி சான்று வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 1979ம் ஆண்டில் அரசு உத்தரவில் டிஎன்டிக்கு என்பதற்கு பதில் (டிஎன்சி) சீர்மரபினர் ஜாதி என மாற்றப்பட்டது. இதனால் பழங்குடி மாணவர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட கட்டணமில்லா கல்வி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.