குஜிலியம்பாறை, டிச. 29: குஜிலியம்பாறை அருகே, ஆதிதிராவிடர் உறுப்பினர்களை தரையில் அமர வைத்த சம்பவம் தொடர்பாக, வாணிக்கரை ஊராசியில் நேற்று ஒன்றிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வாணிக்கரை ஊராட்சி உள்ளது. இங்கு தலைவராக பேபி என்பவரும், துணைத்தலைவராக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெருமாயி என்பவரும் உள்ளனர். மேலும் ஊராட்சியில் 3, 6வது வார்டுகளில் ஆதிதிராவிட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி துணைத்தலைவர் பெருமாயி, ஆதிதிராவிட வார்டு உறுப்பினர்கள் கலெக்டர், எஸ்பியிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வாணிக்கரை ஊராட்சியில் கூட்டம் நடக்கும்போது, ஊராட்சி தலைவர் பேபி, திட்டங்கள் குறித்து எங்களிடம் கருத்து கேட்பதோ, விவாதிப்பதோ இல்லை. கூட்டங்களில் எங்களை தரையில் அமர வைக்கின்றனர். எனவே, ஊராட்சி தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.