மதுரை: தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கலாம் என்றும், தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு பாராட்டும் ஐகோர்ட் கிளை தெரிவித்து உள்ளது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப்பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகளுக்கு உள்ள சாதிப்பெயர்களை நீக்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவ. 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘தமிழ்நாடு அரசின் இந்த திடீர் உத்தரவால் குழப்பம் தான் ஏற்படும்.
ஆதார், அடையாள அட்டை, வாகன பதிவு சான்று, பாஸ்போர்ட் பெயர் மாற்றம் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதை கருத்தில் கொள்ளாமல் அரசாணை வெளியிட்டுள்ளது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘எந்தவித முன்னறிவிப்புமின்றி இவ்வாறு செய்தால் மக்கள் எவ்வாறு முகவரி மாற்றம் செய்வார்கள்’’ என்றனர். அரசு தரப்பில், ‘‘இந்த மனு தாக்கல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது. இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தெருக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாநில தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
அப்போதெல்லாம் வராத குழப்பம் இப்போது எப்படி வந்து விடப்போகிறது? அங்கு போய் மனுதாரர் தடை கோரி மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கொள்கைரீதியாக முடிவெடுத்து அறிவித்து இருப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும். அரசாணை செயல்படுத்துவது குறித்து செயல்முறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதிகளின் பெயர் உள்ள பகுதியில் மக்கள் கருத்து கேட்க வேண்டும், சாதி பெயர் இருக்கும் இடத்தில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றால் அதனை நீக்க வேண்டியது இல்லை என்றும், மாவட்ட நிர்வாகம் இதில் எவ்வித இறுதி முடிவும் எடுக்க முடியாது’’ என்றும் கூறப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘சாதி பெயர்களை நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
அதே நேரத்தில் இதற்கு என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. எனவே, அது குறித்து பதில்மனு தாக்கல் செய்யுங்கள். அதுவரை சாதிய பெயர்கள் மாற்றுவது குறித்து மக்கள் கருத்து கேட்பது, ஆய்வு நடத்துவது போன்றவற்றை செய்து கொள்ளலாம். இறுதி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்’’ என்றும், மனுவிற்கு தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
* டெல்லி, உத்தரப்பிர தேசம் போன்ற மாநிலங்களில் தெருக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மாநில தலை
நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.
