அயோத்தியில் வெடி விபத்து 5 பேர் உடல் சிதறி பலி

அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புரா கலந்தர் காவல் எல்லைக்கு உட்பட்ட பக்லா பாரி கிராமத்தில் நேற்றிரவு ஒரு வீட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. வீட்டில் சிலிண்டர் வெடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதில் அந்த வீடு தரைமட்டமானது. சம்பவ இடத்திலேயே 5 பேர் உடல் சிதறி பலியாகினர். இதில் 3 பேர் குழந்தைகள். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடந்தன. வெடி விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: