ஊட்டி,டிச.23: சாலை வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாக பழங்குடியின கிராமங்களில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கென தனித்தனி பாரம்பரியம், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை கடைபிடித்து வருகின்றனர். ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மந்து எனப்படும் கிராமங்களில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரும்பான்மையான பழங்குடியின கிராமங்களுக்கு போதிய சாலை வசதிகள் இல்லை. இதன் ஒருபகுதியாக ஊட்டி அருகே பதன்கோடுமந்து, கெங்கோடுமந்து, தவட்டகோடுமந்து மற்றும் நரிகுழி மந்து உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவது தொடர்பாக மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமங்கள் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல் இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.