திருத்துறைப்பூண்டி, டிச.17: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ளவீரன் நகரில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு அடிபடை வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நரிக்குறவர்கள் சர்வோதய சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: நாங்கள் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், எங்களை ஜாதியின் அடிப்படையில் எம்பிசியில் வைத்துள்ளதால் அரசு அறிவிக்கும் எந்தவொரு சலுகையும் பெறமுடியாமல் பெரும்பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். எங்கள் பிள்ளைகளைக் கூட படிக்க வைக்க முடியவில்லை. எனவே எங்களை எஸ்.டி. இன மக்களாக மாற்றி தந்தால் எங்கள் இனம் வாழ்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். தற்போது இங்கு சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் தெருவிற்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் நகராட்சியால் அமைத்து கொடுத்த சிமெண்ட் சாலை தற்போது சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் தாசில்தார், நகராட்சி அதிகாரி ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவொரு பயனும் இல்லை.