புதுச்சேரி, டிச. 15: புதுச்சேரி, கோரிமேடு, ஜிப்மரில் 500க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். ஹெல்பர், துப்புரவு, சலவை, சமையல், சவக்கிடங்கு உதவி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இவர்கள் டெல்லி எய்ம்ஸ் ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தை தங்களுக்கு வழங்க வேண்டுமென நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.கோரிக்கையை ஜிப்மர் நிர்வாகம் ஏற்காததால், நேற்று 500க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் நேற்று திடீரென பணியை புறக்கணித்து முற்றுகையில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் ஒட்டுமொத்தமாக தினக்கூலி ஊழியர்கள் அனைவரும் சீருடையுடன் போராட்டத்தில் குதித்ததால் நேற்று உட்புற, வெளிப்புற சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன.