சென்னை: விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை, முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக. 26 முதல் ஆக. 31ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளில் செல்ல tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் வெளியான அறிக்கையில்; 26/08/2025 (செவ்வாய்கிழமை) 27/08/2025 (புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி). 28/08/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 29/08/2025 (வெள்ளிக்கிழமை முகூர்த்தம்), 30/08/2025 மற்றும் 31/08/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு. திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 26/08/2025 (செவ்வாய்கிழமை) அன்று 675 பேருந்துகளும், 28/08/2025 (வியாழக்கிழமை) அன்று 610 பேருந்துகளும், 29/08/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் 30/08/2025 (சனிக்கிழமை) அன்று 380 பேருந்துகளும் மற்றும் 31/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 26/08/2025 (செவ்வாய்கிழமை) அன்று 110 பேருந்துகளும், 28/08/2025 (வியாழக்கிழமை) மற்றும் 29/08/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 90 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 26/08/2025, 28/08/2025 0 29/08/2025 ஆகிய நாட்களில் 24 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 26/08/2025 அன்று 16,372 பயணிகளும், 27/08/2025 அன்று 11,961 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 7,265 பயணிகளும் சனிக்கிழமை அன்று 4,294 பயணிகளும் ஞாயிறு அன்று 9,567 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
