திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, நல உதவி

*வாரிய தலைவர் வழங்கினார்

திருவாரூர் : தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 100 தூய்மை பணியாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டைகளை நலவாரிய தலைவர் முனைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி வழங்கினார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் மின்னணு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரிய தலைவர் முனைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையிலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் இளையராஜா, கலெக்டர் மோகனச்சந்திரன், நாகை எம்.பி செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் பூண்டிகலைவாணன், மாரிமுத்து, தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய துணைத்தலைவர் கனிமொழி பத்மநாபன், கூடுதல் கலெக்டர் பல்லவி வர்மா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் 100 தூய்மை பணியாளர்களுக்கு மின்னணு அடையாள அட்டையும், 2 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையும், 7 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையினையும் வழங்கி நலவாரிய தலைவர் முனைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பேசுகையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு ஒரு சாதாரணமான மனிதரான என்னை (ஆறுச்சாமி) தலைவராக்கியுள்ள தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

தூய்மை பணியாளர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு தவறாது கல்வி வழங்கி, அவர்களை பல்வேறு உயர் பதவி வகிக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன் ஒரு போதும் குழந்தைகளின் கல்வியினை இடைநிற்றல் செய்ய கூடாது.

மேலும் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆறுச்சாமி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ கலைவாணி, திருவாரூர் நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜேந்திரன், மாநில நல வாரிய உறுப்பினர் குருநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அமுதா, நகராட்சி கமிஷ்னர் சுரேந்திரஷா மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து வரும் நகராட்சி கமிஷ்னர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: