ராசிபுரம், டிச.9: ராசிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கைவரிசை காட்டி வந்த 3 பிரபல கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை மற்றும் சொகுசு கார், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக, தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இது தொடர்பான புகார்களின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ராசிபுரம்-நாமக்கல் சாலையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு காரை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டபோது, காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காருடன் 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.