காங்கயம், டிச.9:டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கயத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கயம் சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கயம் கோட்ட செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பல்லடம் வட்ட தலைவர் சுப்பிரமணி, ஐக்கிய சங்கம் கொட்ட செயலாளர் குமாரசாமி உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்:காங்கயம் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் சங்க காங்கயம் வட்ட கிளை செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.