திருவண்ணாமலை, ஏப். 5: திருவண்ணாமலையில் புத்தக திருவிழா வரும் 8ம் தேதி தொடங்குகிறது. அதையொட்டி, அரங்குகள் அமைக்கும் பணியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாக்களை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் புத்தக திருவிழாக்கள் நடந்துள்ளன. அதற்கு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தகத் திருவிழா வரும் 8ம் தேதி தொடங்க உள்ளது. திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான திறந்தவெளி பகுதியில், புத்தக திருவிழாவை முன்னிட்டு 120 அரங்குகள் அமைக்கப்படுகிறது.
மேலும், புத்தக திருவிழா நடைபெறும் 10 நாட்களும், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், படைப்பாளர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதற்கான மேடை உள்ளிட்ட திறந்தவெளி அரங்கமும் அமைக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி அரங்குகள் திறந்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவில் மாணவர்கள் அதிகம் பங்கேற்கவும், மாணவர்கள் பயன்பெறும் புத்தகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கவும், அதற்கு அதிகபட்சம் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை புத்தகத் திருவிழாவை, வரும் 8ம் தேதி மாலை 6 மணிக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ,வேலு திறந்து வைத்து பார்வையிடுகிறார். அதையொட்டி, புத்தக திருவிழா அரங்குகள் அமைக்கும் பணியை நேற்று கலெக்டர் பா.முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, புத்தக திருவிழா நடைபெறும் அரங்கம் மழையால் பாதிக்காதபடி பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்க வேண்டும். தடையில்லா மின்சாரம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது, டிஆர்ஓ பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர் முருகேசன், மாவட்ட நூலக அலுவலர் வள்ளி, நூலகர் சாய்ராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்டிருந்த புத்தக திருவிழா, கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.The post (தி.மலை) 120 அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்