டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
கம்பம், டிச. 4: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வயலுக்குச் சென்று கதிர் அறுத்து நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கம்பத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று வயலுக்குச் சென்று நெல் கதிர் அறுத்து நூதன போராட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் லெனின் கண்டன உரையாற்றினார்.
ஏரியா தலைவர் தமிம்சேட், ஏரியா துணைச்செயலாளர் மணியரசன், ஏரியாக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், ஹாலித், பாண்டி, சேக்முகமது மற்றும் நீர்பாய்ச்சி விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பன்னீர் வேல் உட்பட பெண்களும் கலந்து கொண்டனர். முன்னதாக, வாலிபர் சங்கத்தினர் ஊர்வலமாக வீரப்ப நாயக்கன் குளம் பகுதிக்கு வந்தனர். அங்கு அருகே உள்ள நெல் வயலில் இறங்க முயன்றனர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் கீதா அவர்களை வயலில் இறங்க அனுமதியில்லை என வழிமறித்தார். பின்னர் வாலிபர் சங்கத்தினர் குளக்கரையில் நின்று மாட்டு வண்டியில் ஏறி நெல் கதிரை கையில் வைத்துக்கொண்டு ஆண்களும், பெண்களும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு பின் கலைந்து சென்றனர்.