6ம் வகுப்பு மாணவர்களை தாக்கி ஆணியில் தொங்கவிட்ட சீனியர்கள்

சேலம்: சேலம் அருகே போடா எனக் கூறியதால் ஆத்திரம் அடைந்த 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 6ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை வகுப்பறை ஆணியில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் அருகே பனமரத்துப்பட்டி கம்மாளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை மதிய சாப்பாட்டு நேரத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை, 6ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் போடா என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த 10ம் வகுப்பு மாணவர்கள், அந்த 2 மாணவர்களையும் தாக்கியதோடு மட்டுமல்லாமல், வகுப்பறையில் இருந்த ஆணி மற்றும் கதவு கொக்கியில் இருவரையும் தூக்கி தொங்கவிட்டுள்ளனர். இதில் ஒரு மாணவனின் சட்டை பட்டன் அறுந்து கழுத்தை நெரித்துள்ளது.

பின்னர் இருவரையும் சக மாணவர்கள் கீழே இறக்கி விட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பள்ளி ஆசிரியர்கள் 10ம் வகுப்பு மாணவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று ஆணியில் தொங்கவிடப்பட்ட மாணவர்களில் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சட்டை கழுத்தை நெரித்ததால் தொண்டை வலிப்பதாக கூறியதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பனமரத்துப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post 6ம் வகுப்பு மாணவர்களை தாக்கி ஆணியில் தொங்கவிட்ட சீனியர்கள் appeared first on Dinakaran.

Related Stories: