300 ஆண்டு பழமையான சிதம்பர தீர்த்தம் புனரமைப்பு

ராமேஸ்வரம், ஏப்.18: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 108 புனித தீர்த்தக்குளங்கள் அமைந்துள்ளன. இதில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் ஆகும். ராமேஸ்வரம் வரும் யாத்திரிகர்கள் ஒரு மாத காலம் தங்கி 108 தீர்த்தங்களிலும் நீராடி தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வது பழமையான வழிபாட்டு முறையாகும். இந்த 108 தீர்த்தங்களில் சில தீர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு ம்றும் இயற்கை சீற்றங்களினால் புதைந்து மறைந்து இருந்தன. இந்த தீர்த்தங்களை கண்டுபிடித்து, முட்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் எழுப்பி, பக்தர்கள் செல்ல ஏதுவாக விவேகானந்த கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் கீழ் கடந்த 12 வருட காலமாக ஈடுபட்டு வருகிறது. இதுவரையிலும் 50 தீர்த்தங்களில் பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளன. தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மணலால் மூடப்பட்டு முட்புதர்களால் சூழப்பட்டிருந்த சிதம்பர தீர்த்தம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி தலைமையில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி கூறியதாவது, சிதம்பரம் தீர்த்தம் பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவை மற்றும் பக்தர்கள் நீராட இந்த தீர்த்தம் முன்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. முட்புதர்கள், மணல் மூடிய நிலையில் உள்ள இந்த தீர்த்தத்தை கண்டறிந்து, புனரமைக்கும் பணிகள் ஓராண்டிற்கு முன்பு துவங்கின. தற்போது பணிகள் முழுவதும் நிறைவடைந்ததும் பாம்பன் கிராம மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய சிதம்பரம் தீர்த்தம் பயன்படும் என்றார்.

The post 300 ஆண்டு பழமையான சிதம்பர தீர்த்தம் புனரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: