கிருஷ்ணகிரி, பிப்.20: கிருஷ்ணகிரியில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், டாக்டர். முத்து லட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் குறித்த அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கோவிந்தன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி தகுதியுள்ள தாய்மார்களுக்கு சென்றடையவும், துணை சுகாதார நிலைய வாரியாக பயனாளிகளுக்கு சென்ற உதவித்தொகை விவரத்தினை பதிவேட்டில் பராமரிக்க உரிய ஏற்பாடுகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின்கீழ் பெறப்படும் விண்ணப்பங்களுக்கு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சேர வேண்டிய நிதியுதவியினை உரிய மருத்துவ அலுவலர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட பயனாளிகளை நேரில் சென்று சந்தித்து, அவர்களது வங்கி கணக்கு புத்தகத்தை தயார் நிலையில் வைத்துக்கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.