தேன்கனிக்கோட்டை, செப்.19: தேன்கனிக்கோட்டை பகுதியில் அவசர உதவிக்கு செல்லும்போது நடுவழியில் ஆம்புலன்ஸ்கள் பழுதாகி நிற்கும் நிலையில், மாற்று ஏற்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மலை குன்றுகள் நிறைந்த பகுதியாகும். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வாகனத்தை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு அவரச அழைப்பின்பேரில், 108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றது. தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே செல்லும்போது ஆக்சில் கட்டாகியதில் முன்பக்க சக்கரம் கழன்று தனியாக ஓடியது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான ஓட்டுனர், சாமர்த்தியமாக செயல்பட்டு சற்று தொலைவில் ஆம்புலன்ஸ்சை நிறுத்தியுள்ளார். இதன்மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.