புதுச்சேரி, செப். 10: புதுவை ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் மோசடியாக சேர முயன்ற தமிழக மாணவியின் தந்தையிடம் ஜிப்மர் நிர்வாகம் 2 மாதங்களுக்கு பிறகு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி புதுச்சேரி இடஒதுக்கீட்டில் இந்தாண்டு சேர்க்கை பெற்றார். இந்த முறைகேடு தொடர்பாக பெற்றோர்- மாணவர் நலச்சங்கம் புகார் அளிக்கவே, 54 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் மாணவி கிருத்திகா தமிழகம், புதுவையில் முகவரி பதிவில் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வில் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக புதுச்சேரி வருவாய்துறை செயலர் உத்தரவின்பேரில் விசாரணை அடுத்தடுத்து நடைபெற்றது. கோரிமேடு காவல் நிலையத்திலும் சமூக அமைப்புகள் தரப்பில் முறையிடப்பட்டது. இந்நிலையில் 2 மாத காலத்துக்குபின் இவ்விவகாரம் தொடர்பாக முறைகேட்டில் சிக்கிய மாணவி கிருத்திகாவின் தந்தை குமாரிடம் விளக்கம் கேட்டு ஜிப்மர் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. போலியாக முகவரி அளித்து தேர்வெழுதி ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடஒதுக்கீடு பெற முயன்ற மாணவி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற கேள்வியை முன்வைத்து ஒருவாரத்தில் விளக்கம் தர கோரியுள்ளதாக தெரிகிறது.