புதுச்சேரி, ஆக. 14: சுதந்திர தின விழாவுக்கு போக்குவரத்து காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடற்கரை சாலையில் நாளை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழாவில் பங்கேற்பவர்கள் செல்போன், கேமரா எடுத்துவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்துக்கு வரும் விஐபிக்கள், மக்கள் எந்தெந்த சாலை வழியாக வர வேண்டும், எங்கு தங்களது வாகனத்தை பார்க்கிங் செய்ய வேண்டும், எந்தெந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து (வடக்கு- கிழக்கு) எஸ்பி முருகவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பு:- விழாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கபெற்ற அனைவரும் வம்பாகீரப்பாளையம் ரோடு வழியாக விழா திடலுக்கு வரவேண்டும். கார் அனுமதி பெற்ற வாகனங்கள் வம்பாகீரப்பாளையம் சாலை வழியாக வந்து விழா நடக்கும் மைதானத்துக்கு வடக்கு பக்கம் கதவு எண்: 1 வழியாக மைதானத்துக்குள் வந்து ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். கார் அனுமதி பெறாத அழைப்பாளர்களின் வாகனங்கள் அனைத்தும் வம்பாகீரப்பாளையம் சாலையில் விழா நடக்கும் மைதானத்திற்கு தெற்கு பக்கம் உள்ள கதவு எண்: 2 அருகில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
அணி வகுப்பில் பங்கேற்கும் காவலர்கள் மாணவ மற்றும் மாணவியர் தங்கள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வம்பாகீரப்பாளையம் சாலையில்உள்ள பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நிறுத்த வேண்டும். விழாவிற்கு வரும் அழைப்பாளர்கள் , உணவு பொருட்கள், கண்ணாடி-பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கேமரா மற்றும் செல்போன் போன்ற பொருட்களுக்கு அனுமதியில்லை. இவற்றை கொண்டு வர வேண்டாம். விழாவுக்கு வரும் அழைப்பிதழ் பொறாத பொதுமக்கள் அம்பேத்கர் சாலை வழியாக விழா நடக்கும் மைதானத்திற்கு செல்ல வேண்டும். இரண்டு சக்கர வாகனங்கள் பெத்திசெமினார் ஆரம்ப பள்ளி திடலில் நிறுத்தப்பட வேண்டும். கார் மற்றும் இதர வாகனங்கள் உப்பளம் புதிய துறைமுக திடலில் நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் குழந்தைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சென்று அமர வேண்டும். கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க காலை 08.30 மணிக்கு வந்து விட வேண்டும்.
கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அன்று காலை 6 மணி முதல் பகல் 1.30 மணி வரையில், மதியம் 4 மணி முதல் மறு நாள் காலை 7.30 மணி வரையிலான நேரங்களில் வாகனங்கள் (சைக்கிள் உட்பட) எதுவும் மேற்கண்ட சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. கடற்கரை சாலை துய்மா வீதி மற்றும் பாரதி பூங்கா, ஆளுநர் மாளிகை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் தவிர எந்தவித வாகனங்களும் நிறுத்தக் கூடாது. மாறாக புதுவை சட்டசபை மற்றும் பொது மருத்துவமனைக்கு மேற்கே உள்ள மூடப்பட்டுள்ள பெரிய வாய்க்கால் மீது நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.