புதுக்கோட்டை, ஆக.11: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் லாரி மோதி பள்ளி மாணவர் நேற்று உயிரிழந்தார்.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் திலக்(14). இவர், புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திலக், அப்துல் சபீக்(14) ஆகியோர் வடகாடு கடைவீதியில் நேற்று உணவு வாங்கிக் கொண்டு பள்ளிக்கு திரும்பினர்.காவல் நிலையம் அருகே சென்றபோது, இவர்களது டூவீலர் மீது எதிரே வந்த லாரி மோதியதில் திலக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் பட்டுக்கோட்டை அடுத்த கருப்பூரை சேர்ந்த ஆறுமுகம் (40) என்பவரை வடகாடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.