வில்லியனூர், ஆக. 8: மங்கலம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து இளம்பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். புதுவை வில்லியனூர் மங்கலம் ஏரிக்கரை வீதியில் வசிப்பவர் ராமச்சந்திரன் (50). இவரது மனைவி கவுசல்யா (45). சம்பவத்தன்று ராமச்சந்திரன், தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்திருந்தார். வீட்டில் மெயின் கதவு இல்லாததால் ஸ்கிரீன் மட்டும் தொங்க விடப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம ஆசாமிகள், பீரோ அறைக்கு சென்றுள்ளனர். அங்கும் ஒன்றும் இல்லாததால் தரையில் படுத்திருந்த கவுசல்யாவின் 20 வயது மகள் அணிந்திருந்த ஒரு பவுன் செயினை மர்ம நபர்கள் பறிக்கவே, அவர் கூச்சலிட்டார். இதையடுத்து சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்ததும் அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மங்கலம் போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் பழனிவேல், எஸ்ஐ தயாளன் தலைமையிலான போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.