ஓசூர், மே 24: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. 3 குட்டிகளுடன் சுற்றி திரிந்த 14 காட்டு யானைகளை, நேற்று முன்தினம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்நிலையில், சானமாவு, பேரண்டப்பள்ளி, போடூர் உள்ளிட்ட பகுதிகளில் 6 யானைகள் பிரிவுகளாக பிரிந்துள்ளன. இதில் ஒற்றை யானை ஒன்று அம்பலட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியது. விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் வந்து பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் ஒற்றை யானையை போடூர்பள்ளத்திற்கு விரட்டியடித்தனர்.