அருப்புக்கோட்டை, மார்ச் 14: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள், பரிசோதனை டப்பாக்களை கண்ட, கண்ட இடங்களில் வைப்பதால் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது என மருத்துமனை ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அருப்புக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனையாகும். இங்கு தனியார் மருத்துவமனைக்கு நிகராக சுகாதாரம் பேணப்பட்டு வருகிறது. இங்கு சிறுநீர், மலம், ரத்த பரிசோதனைக்கு வரும் நோயாளிகள், சிறிய டப்பாக்கள் சோதனை செய்ய வேண்டியதை பரிசோதனை நிலையத்தில் கொடுக்கின்றனர். நோயாளிகள் கொண்டு வருவதில் சோதனைக்கு தேவையான அளவை எடுத்துக்கொண்டு, பாக்கியை டப்பாவுடன் நோயாளிகளிடம் கொடுத்து விடுகின்றனர். இந்த டப்பாக்களை வைப்பதற்கு ஒரு டிரே உள்ளது. ஆனால், நோயாளிகள் கண்ட, கண்ட இடங்களில் வைத்து விடுகின்றனர். இதனால், மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ள்து.
மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் டப்பாக்களை எடுத்து டிரேயில் கொண்டுபோய் வைக்கின்றனர். அப்போது கையுறை அணிவதில்லை. இதனால், அவர்களுக்கு தேமல் மற்றும் அரிப்பு போன்ற தொற்றுநோய் ஏற்படுவதாக கூறுகின்றனர். இதேபோல் மலப் பரிசோதனைக்கு நோயாளிகள் கழிப்பறையை பயன்படுத்தாமல், மருத்துவனை வளாக ஒதுக்குப்புறத்தில் கண்ட, கண்ட இடங்களில் இருந்து எடுத்துக் கொடுக்கின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுகிறது. இதையும் ஒப்பந்த தொழிலாளர்கள் சுத்தம் செய்ய வேண்டி உள்ளது. எனவே, ரத்த பரிசோதனை பிரிவில் உள்ளவர்கள் மலம் மற்றும் சிறுநீர் சோதனைக்கு வரும் நோயாளிகளிடம் சோதனைக்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு மீதியை கொடுக்கும் போது குறிப்பிட்ட இடத்தில் தான் வைக்கவேண்டும் என அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் சோதனையின் முடிவு தரமாட்டோம் என எச்சரிக்கை வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் சுகாதாரத்தை கடைபிடிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.