திருப்பூர், மார்ச் 12:திருப்பூர் மாவட்டத்தில் கடை வியாபாரிகளை பாதிக்கும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டுமென கலெக்டரிடம் திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் சம்மேளன நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.இது குறித்து திருப்பூர் மாவட்ட வியாபாரிகள் சம்மேளத்தின் மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதாரமற்ற வகையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்களிடம் ஒரு சில அமைப்புகள் சுய லாபத்திற்காக சந்தா என்ற பெயரில் பணம் வசூலித்து உறுப்பினர் அட்டைகளை வழங்கி பாதுகாப்பு அளித்து வருகிறது. கடை நடத்த முறையான உரிமம் பெற்று அனைத்து வகையான வரியினங்களை செலுத்தி தொழில் செய்து வருகிறோம். எங்களின் கடைகளுக்கு அருகிலேயே நடைபாதைகளை ஆக்கிரமித்தும், சுகாதாரமற்ற வகையில் பல்வேறு பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் எங்களுடைய வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.