சேதமான வாக்காளர் அட்டைக்கு மாற்றாக ₹25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டை கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 8: திருவண்ணாமலை மாவட்டத்தில் பழைய, சேதமான வாக்காளர் அட்டைக்கு மாற்றாக ₹25 செலுத்தி புதிய வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற லட்சியத்தை முன்னிறுத்தி இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் அடிப்படையில் வாக்குரிமையை செலுத்தும் வாக்காளர்கள் தங்களது பழைய அல்லது சேதமடைந்த வாக்காளர் அடையாள அட்டையை வாக்கு செலுத்தும் நேரத்தில் உபயோகப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, அதனை தவிர்க்கும் விதமாக வாக்காளர்கள் இம்மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் அரசு இ-சேவை மையங்களில் வாக்காளர் படிவம் எண் 001 பூர்த்தி செய்து சம்பந்தபட்ட வட்டத்தின் துணை தாசில்தாரிடம் கையொப்பம் பெற வேண்டும். இதையடுத்து, அடையாள அட்டைக்கான ₹25 கட்டணம் செலுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories: